நாடே ராமர் நாமம் ஒலிக்கிறது - திருச்சியில் ஆளுநர் ரவி பேட்டி

நாடே ராமர் நாமம் ஒலிக்கிறது - திருச்சியில் ஆளுநர் ரவி பேட்டி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், அர்ச்சகர்கள் சுந்தர் உள்ளிட்டோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

பின்னர் கருடாழ்வாரை தரிசனம் செய்து மூலஸ்தானம் சென்றார். தொடர்ந்து ஆளுநர் ரங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயர் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர்..... நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும் என்றார். இன்று மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் ரவி பங்கேற்க உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision