திருச்சியில் வெள்ள அபாயம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சியில் வெள்ள அபாயம் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இருகரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை வெள்ளம் நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்கக் கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

பொதுமக்கள் தங்களது ஆதார் குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி (பிளாஸ்டிக் கவர்) உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். நீர்வீழ்ச்சிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கீழ்க்கண்ட பொருட்களை வைத்திருக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. மெழுகுவர்த்தி மற்றும் தீப்பட்டி
2. ஒரு வார காலத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்
3. எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்
4. மருந்து மற்றும் பால் பவுடர்
5. மின் விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள்
6. சுகாதாரத்தை பேணி காக்க தேவையான பொருட்கள் 
7. முகக் கவசங்கள் 
பொதுமக்கள் அனைவரும் மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி எவ்வித சேதமும் ஏற்படாமல் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/Trichyvision