சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா- முகூர்த்தகால் நடும் வைபவம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா- முகூர்த்தகால் நடும் வைபவம்

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோவிலில் உள்ள அம்மனை வேண்டினால் நினைத்தது நடக்கும், செல்வம் பெருகும் குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் இக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 13ம் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர்த் திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பாடாகி கொடிமரம் முன்பு எழுந்தருளுகிறார். தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதேபோன்று ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். மேலும் தினமும் இரவு சிம்ம, பூத, அண்ண ரிஷப, யானை, சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

வருகின்ற 18 ந் தேதி அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10 மணிக்கு மேல் அம்மன் தேரில் எழுந்தருளுகிறார். அதை தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிலையில் தேரோட்ட விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி, கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO