தென்திருப்பதி குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன்

தென்திருப்பதி குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் -  அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன்

தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்ன வேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும்.

பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும். கடந்த 18-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.

வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேர்திருவிழாவை துவக்கி வைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision