மாணவர்கள் திருச்சியின் ஒரு நாள் கலெக்டராக வாய்ப்பு

மாணவர்கள் திருச்சியின் ஒரு நாள் கலெக்டராக வாய்ப்பு

போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் மாணவ, மாணவியர்களைக் கொண்ட போதைப்பொருள் எதிர்ப்புக்குழுவினை (Anti Drug Club Launching) தொடங்கி வைத்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தொடர்ந்து போதை பொருளுக்கு எதிர்ப்பு குறித்த ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித் குப்தா, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.....திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே போதைப்பொருள் எதிர்ப்பு குழு அமைக்கபட்டுள்ளது. அவர்களுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு போதைப்பொருள் எதிர்ப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் தங்களது பள்ளியில் நடைபெறக்கூடிய தவறுகள் மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி போதை பொருள் விற்பனை செய்யும் நபர்களைப் பற்றியும் தகவல்கள் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

போதைப் பொருளால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த நிகழ்வு நடைபெற்றது. மேலும் திருச்சி மாவட்டத்தில் நடைபெறக்கூடிய தவறான செயல்களை குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுப்பதற்காக இலவச தொலைபேசி எண் மற்றும் வாட்ஸப் எண் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இடையே இருந்து புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மேலும் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையை முழுமையாக ஒழிக்கும் வரை தொடர்ந்து அதிரடி சோதனைகள் நடைபெறும்.

புகார்கள் தெரிவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றிய விவரங்களை யாரும் கேட்க மாட்டார்கள். புகாரை மட்டும் எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் தினந்தோறும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அதில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கையும், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை மெத்தனால் யாருக்கும் விற்பனை செய்யப்படவில்லை.

மதுபான கடைகள் அரசு விதித்துள்ள நேரங்களை தாண்டி மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான கடைகளில் இரவு , அதிகாலையில் மதுபானம் விற்பனை செய்வதாக புகார்கள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மதுபான கடைகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும். தவறுகள் நடந்திருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் மதுபான கூடம் இயங்கினால் உடனடியாக சீல் வைக்கப்படும்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்.... திருச்சி மாவட்டத்தில் போதைப்பொருளை ஒழிப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் குறித்த தகவல்களை அதிகமாக கொடுக்கும் மாணவர்கள் திருச்சியின் ஒரு நாள் ஆட்சியராக அமர்த்தப்படுவார். அதிகமான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தினம் ஒருவர் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision