காவல் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர்

காவல் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய திருச்சி மாநகர மற்றும் மாவட்ட காவல் துறையினர்

கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, திருச்சி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு 
சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையுடன் மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் துணை தலைவர் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கூடுதல்
காவல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் பங்கு கொண்டு காவலர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பேசும்போது, கடந்த ஆண்டில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களையும் மற்றும் திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் உயிர்நீத்த காவலர்களையும் மற்றும் கொரோனா பணியின்போது உயிர் நீத்த காவலர்களையும் நினைவு கூர்ந்தார்.

பின்னர் துப்பாக்கி முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை 
செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி 
செலுத்தினர். வீர வணக்க நாளை முன்னிட்டு போலீஸார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn