கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்ற இரண்டு ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்ற இரண்டு ரவுடிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையிலும், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கத்தியை காண்பித்து பணத்தை கொள்ளையடிக்கும் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

அதன்படி, கடந்த (19.09.23)-ந் தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்மலைபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் நடந்து சென்ற பெயிண்டிங் வேலை செய்யும் தொழிலாளியிடம் கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக கொடுத்த புகாரின்பேரில் காஜாமலை பகுதியை சேர்ந்த ரவுடி ஆல்வின் ஜோஷ்வா த.பெ.ஜான்பீட்டர் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த (09.09.23)-ந் தேதி பாலக்கரை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வேர்ஹேவுஸ் அருகே ஒரு நபரிடம் கத்தியை காட்டி சட்டைபையிலிருந்து பணத்தை பறித்து சென்றதாக கொடுத்த புகாரின்பேரில் தர்மநாதபுரம், பாலக்கரை பகுதியை சேர்ந்த ரவுடி தாமஸ் ஆண்டனி த.பெ.லியோ பெர்னான்டஸ் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரவுடி ஆல்வின் ஜோஷ்வா என்பவர் மீது பொன்மலை காவல்நிலையத்தில் 2 கொலை வழக்குகளும், கத்தியை காட்டி பணம் பறித்து சென்றதாக ஒரு வழக்கும், புதுச்சேரி மாநிலத்தில் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தததாக ஒரு வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும்,

எதிரி தாமஸ் ஆண்டனி மீது பாலக்கரை காவல்நிலையத்தில் அடிதடி வழக்கு -2, திருட்டு வழக்கு -1, கஞ்சா வழக்கு- 1, திருச்சி மாவட்டம் லால்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியை காட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கு உட்பட 5 வழக்குகள் உள்ளதாக விசாரணையில் தெரியவருகிறது.

எனவே, எதிரிகள் ஆல்வின் ஜோஷ்வா மற்றும் தாமஸ் ஆண்டனி ஆகியோர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தபட்ட காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் N.காமினி, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision