ஸ்ரீரங்கத்தில் நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார் - 3 பேர் பலி

ஸ்ரீரங்கத்தில் நடைபாதையில் தாறுமாறாக ஓடிய கார் - 3 பேர் பலி

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் சாலையோர நடைபாதையில் ஏராளமான யாசகர்கள் இரவில் படுத்து உறங்கி தங்கி வருகின்றனர். இந்த நிலையில் அம்மா மண்டபம் அருகே உள்ள கீதாபுரம் பகுதியிலுள்ள சாலையோர நடைபாதையில் வழக்கம் போல் யாசகர்கள் இரவில் படுத்திருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடி அம்மா மண்டபம் சாலையில் கீதாபுரம் அருகே நடைபாதையில் படுத்திருந்தவர்கள் மீது ஏறியது. இதை கண்ட அப்பகுதிவாசிகள் காரில் வந்தவர்களை அடித்து உதைத்தனர். மேலும் அந்த காரை அடித்து நொறுக்கினர். இந்த விபத்தில் யாசகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனை அடுத்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காரின் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர நடைபாதையில் படுத்து இருந்தவர்கள் மீது ஏறியதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து காரை ஓட்டி வந்த லட்சுமி நாராயணன் என்பவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரில் வந்த இரண்டு பேர் தப்பி ஓடியதால் அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விபத்து நடந்த பொழுது 100 மீட்டர் தூரத்திற்கு கார் நடைபாதையிலே சென்று அப்பகுதியில் இருந்து மின் கம்பம் மற்றும் கொடி கம்பங்களை இடித்து உடைத்து சாய்த்து உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn