தனி வட்டாட்சியர் மீது தாக்குதல் – திருச்சி திமுக பிரமுகர் கைது

தனி வட்டாட்சியர் மீது தாக்குதல் – திருச்சி திமுக பிரமுகர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஜீவாத்தெருவில் வசித்து வருபவர் அரிசி ஆலை அதிபர் கோபி. திமுக நகர பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று வருவாய் வட்டாட்சியர் வளாகத்தில் உள்ள நகர நிலவரி திட்ட அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த தனிவட்டாட்சியர் ஜே.பாத்திமா சகாயராஜிடம் ஒரு பட்டாதாரரின் நிலம் விபரம் குறித்து தகவல் பெற ஆவணம் அளித்துள்ளார். அதற்கு விபரம் பெற்ற கோபி மற்றோரு புலத்திற்கான விபரம் கேட்டதாகவும் அப்போது தனிவட்டாட்சியர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. தகவலறிந்து வருவாய் வட்டாட்சியர் எம்.லஜபதிராஜ், காவல் ஆய்வாளர் சு.கருணாகரன் ஆகியோர் நிகழ்விடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் இருவரும் காயமடைந்து, கோபி தனியார் மருத்துவமனையிலும், தனிவட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக நகர நிலவரி திட்ட ஆய்வாளர் பா.குணசேகரன் அளித்த புகாரின்பேரில் கோபி மீது தகாத வார்த்தையால் பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கைகளால் தாக்குதலில் ஈடுபட்டது என 3 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார் திமுக நகர பொருளாளர் கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதியில் இருந்த நிலையில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தனி வட்டாட்சியரை தாக்கிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn