பைக் மீது கார் மோதி விபத்து - ஒருவர் பலி - இளம்பெண் படுகாயம்.

பைக் மீது  கார் மோதி விபத்து - ஒருவர் பலி - இளம்பெண் படுகாயம்.

திருச்சி ஈ.பி.ரோடு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (52). இவரது உறவினரின் சிவரஞ்சனி (27) ஆன்லைன் வங்கித் தேர்விற்க்காக விண்ணப்பித்திருந்தார். இந்த தேர்வானது சிறுகனூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைப்பெற்றது.

இந்த தேர்வை எழுத ரமேஷ் மோட்டார் பைக்கில் சிவரஞ்சனியை தேர்வு மையத்திற்கு நேற்று காலை அழைத்து சென்றார். அப்போது சிறுகனூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது புதுச்சேரியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார், மோட்டார் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவரஞ்சனி படுகாயம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த சிவரஞ்சனியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் போலீசார், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் புதுச்சேரி தோப்புரோடு பகுதியைச் சேர்ந்த (30) முத்துக்குமரனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision