திருச்சி அருகே பைக்கிலிருந்து விழுந்த கல்லூரி மாணவர் பலி

திருச்சி அருகே பைக்கிலிருந்து விழுந்த கல்லூரி மாணவர் பலி

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா தெற்குகாட்டூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சந்தோஷ்குமார் (19). இவர், திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், சிறுகனூர் அருகே கொணலை கல்பாளையத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக திருச்சியில் இருந்து தனது மோட்டார் பைக்கில் வந்துள்ளார். பின்னர் உறவினரை பார்த்து விட்டு மீண்டும் மதியம் 02:30 மணியளவில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது சமயபுரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருங்களூர் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் பைக் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சந்தோஷ்குமாரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision