மணப்பாறை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

மணப்பாறை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

மணப்பாறை அருகே செவலூர் பெரிய குளத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விரால், கெண்டை, கெளுத்தி மீன்களை பிடித்து சென்றனர். 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள செவலூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய குளத்தில் இன்று காலை மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். வழிபாட்டிற்கு பின் செவலூர் ஊர் நாட்டாமை வினோத்குமார், நகராட்சி நகர் மன்ற 2வது வார்டு உறுப்பினர் அழகு சித்ரா  உள்ளிட்ட  ஊர் முக்கியஸ்தர்கள் வலை வீசி மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெற்ற இந்த மீன்படி திருவிழாவில் கலந்து கொண்டனர். மேலும் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத்தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. கண்மாயில்  மீன்கள் அதிகமாக இருந்ததால் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக  மீன் பிடி திருவிழா நடந்தது.  பொதுமக்கள் கண்மாயில் மீன்கள் பிடித்த மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்குச் சென்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO