சாக்கடையில் கைத்துப்பாக்கி - திருச்சியில் பரபரப்பு

சாக்கடையில் கைத்துப்பாக்கி - திருச்சியில் பரபரப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் சவுராஷ்ட்ரா தெரு அருகே மன்னார்பிள்ளை சந்து பகுதியில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சாக்கடை கால்வாய்க்குள் கைத்துப்பாக்கி ஒன்று கிடந்தது.

அதை எடுத்து, சாக்கடை கால்வாய்க்கு வெளியே போட்ட அவர்கள், இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அந்த கைத்துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

பெரிய கடைவீதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நகைக்கடைகள், நகை பட்டறைகள் உள்ளன. துப்பாக்கி கிடந்த தெரு அதன் அருகே தான் உள்ளது. இதனால் கொள்ளையர்கள் அந்த பகுதியில் ஏதேனும் கொள்ளையடிக்க திட்டமிட்டு வந்த போது, ரோந்து போலீசாரை பார்த்து துப்பாக்கியை சாக்கடையில் வீசி சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இருப்பினும் அந்த துப்பாக்கி யாருடையது? எதற்காக அதை சாக்கடையில் வீசிச்சென்றனர்? என்று தெரியவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அதை வீசி சென்ற மர்மநபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision