ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும் நம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவை

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும் நம்பெருமாள் தாயாருடன் சேர்த்தி சேவை

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சேர்த்தி சேவை கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆதிபிரம்மோற்சவ திருநாள் என்றழைக்கப்படும் பங்குனி தேரோட்ட விழா கடந்த 28.03.2023ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்துவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சேர்த்தி சேவை இன்று நடைபெற்றது. 

நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு திருச்சுற்று வழியாக தாயார் சன்னதியை வந்தடைந்தார். அங்கு ரெங்கநாதர் தான் அணிந்திருந்த மோதிரத்தை நாச்சியாருக்கு அன்பளிப்பாக அளித்ததையடுத்து. தாயாருக்கும், நம்பெருமாளுக்கும் இடையேயான சண்டை நம்மாழ்வாரால் தீர்க்கப்பட்டு சமாதானமடைந்து ஏற்றுக்கொள்வார்.

இதனை நினைவுகூரும்விதமாக நடைபெறும் சேர்த்தி சேவை வைபத்தின்போது, பங்குனி உத்திர மண்டபத்தில் நம்பெருமாளுடன் தாயாரும் இணைந்து சேர்த்தி சேவை சாதித்தார். வருடத்தில் பங்குனிஉத்திரம் அன்று ஸ்ரீதாயார் ஸ்ரீரெங்கநாதர் சேர்ந்திருப்பர். அன்றையதினம் வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், வேண்டுவன கிடைக்கும், திருமண பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதனால் ரெங்கநாதரையும் தாயாரையும் சேவிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சேவித்துவருகின்றனர். நாளை காலை பங்குனித் தேரோட்டம் நடைபெறுகிறது.