பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலம் பொருத்தும் பணிகள் தீவிரம்

பாம்பன் புதிய ரயில் தூக்குப் பாலம் பொருத்தும் பணிகள் தீவிரம்

அதிகரித்து வரும் பயண தேவைகளை கருத்தில் கொண்டு பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படுகிறது. இப்பாலத்தின் கட்டுமான பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாம்பன் ரயில் பாலம் 110 ஆண்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. குறிப்பிட்ட கால இடை வெளியில் வர்ண பூச்சு செய்தும் கடல் உப்பு காற்று காரணமாக கப்பல்களுக்கு வழி விடுவதற்காக திறக்கப்படும் பாலத்தின் கர்டர் பகுதிகள் துருப்பிடிக்க ஆரம்பித்தது.

சில இடங்களில் துரு காரணமாக இரும்பு பட்டைகளின் கனம் குறைய ஆரம்பித்தது. பாலத்தின் அபாய நிலையால் ரயில்கள் 2 கிலோ மீட்டர் பாலப்பகுதியில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட்டன. பராமரிப்பிற்கென ரயில் போக்குவரத்தை அடிக்கடி நிறுத்தவேண்டிய சூழலும் ஏற்பட்டது. தொழில் நுட்ப வல்லுநர்கள் இப்பாலத்தை தொடர்ந்து பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும் என, கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நவீன வசதிகளுடன் ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்ட ரயில்வே வாரியம் முடிவு செய்தது. புதிய பாலம் கடலில் 2.8 கி.,மீ. நீளத்துக்கு நடுவில் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் கட்டப்படுகிறது. நடுவிலுள்ள 72.5 மீட்டர் லிஃப்டிங் கிர்டர் செங்குத்தாக மின் இயந்திரவியல் சக்தி மூலம் திறந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலம் இருபுறமும் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மனித ஆற்றல் மூலம் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய பாலம் செங்குத்தாக திறக்கப்படும் இந்தியாவின் முதல் பாலமாக அமைகிறது. பெரிய கப்பல்கள் சென்று வரும் விதமாக நடுவிலுள்ள லிப்டிங் கிர்டர் 17 மீட்டர் உயரத்துக்கு மேலே செல்லும். இது அருகிலுள்ள சாலை பாலத்துக்கு இணையான உயரம் ஆகும்.

கடல் பகுதியை பாது காக்கும் வகையில் லக்னோ ரயில் ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிர்ணய அமைப்பின் ஆலோசனையின்பேரில், பாலத்தின் கர்டர்களை வடிவமைக்கும் பணி பாம்பனில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் நடந்தது. அங்கிருந்து வடிவமைத்துக் கொண்டு வரப்பட்ட கிர்டர்கள் மற்றும் லிப்டிங் ஸ்பேன் ஆகியவை பாலத்தில் பொருத்தப்படுகின்றன. கடலில் 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 கான்கிரீட் தூண்கள் ஆகியவை ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டு விட்டன. எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையில் அடித்தளமும், தூண்களும் அகலமாக அமைக்கப்பட்டுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision