தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகை பறிப்பு

தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகை பறிப்பு

 மணப்பாறை அடுத்த வடுகப்பட்டியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து உறங்கிக்கொண்டிருந்த பாலமணி, பத்மா ஆகிய பெண்களிடம் தலா 3 சவரன் வீதம் 6 சவரன் செயின்களை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓட்டம். போலீஸார் விசாரணை.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வடுகப்பட்டியில் தேனீர் கடை வைத்து நடத்தி வந்தவர் ராதகிருஷ்ணன். இவர் பாலமணி, பத்மா என சகோதரிகள் இருவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரமணிகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் ராதகிருஷ்ணன் உயிரிழந்த நிலையில், பாலமணி, பத்மா ஆகிய இருவரும் கடைக்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து மகனுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கடையினை மூடிய பிறகு பாலமணி, பத்மா, ரமணிகிருஷ்ணன் ஆகிய மூவரும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது வீட்டின் பக்கவாட்டில் உள்ள வேலியினை பிரித்தும், கதவினை உடைத்தும் உள்ளே நுழைந்த இரு இளைஞர்கள் ரமணிகிருஷ்ணன் உறங்கிக்கொண்டிருந்த அறையின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு ஹாலில் படுத்திருந்த பாலமணி, பத்மா ஆகியோர் கழுத்தில் இருந்த தலா 3 சவரன் வீதம் 6 சவரன் செயின்களை பறித்துள்ளனர்.

பெண்கள் விழித்துக்கொண்டு அலறிய நிலையில் இளைஞர்கள் வேலி வழியாகவே தப்பி சென்றுள்ளனர். பின்னர் ரமணிகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்தபோது அருகில் இருந்த வீட்டின் உரிமையாளரான சிங்கப்பூரில் வேலை பார்த்து வரும் சத்யமூர்த்தி வீடும் திறந்து கிடந்துள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதும் சிதறிய நிலையில் இருப்பதால், மர்ம நபர்கள் அந்த வீட்டிலும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது வீட்டில் காணமல் போன பொருட்கள் குறித்து விபரம் தெரியவில்லை. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் லியோனியா தலைமையிலான போலீசார் அருகிலுள்ள CCTV கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn