மலைக்கோட்டையில் கார்த்திகை மகாதீபம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

மலைக்கோட்டையில் கார்த்திகை மகாதீபம் - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

தென்கயிலாயம் என போற்றப்படுவதும், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் ஸ்வாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் லிங்கவடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான் தாய்வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த ஸ்தலம் என்பதால் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார்.

பழமையானதும் பிரசித்து பெற்ற இம்மலைகோட்டையில்,  இக்கோவிலில் மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் என்றழைக்கப்படும் விநாயகர் கோவிலும், மலைநடுவே தாயுமானவர் மட்டுவார் குழலம்மையும், மலையின் கீழே மாணிக்க விநாயகரும் எழுந்தருளி காட்சியளிக்கின்றனர். 

இக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று மாலை பரணிதீபம் ஏற்றப்பட்ட நிலையில், தாயுமானவர் சன்னதியிலிருந்து இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு,  தாயுமானவர், மட்டுவார் குழலமை உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி காட்சியளிக்க, கொம்பு வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க 273 அடி உயரமும், 417 படிகள் கொண்ட

மலைக்கோட்டை உச்சி தாயுமானவர் சன்னதி, பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான இரும்பு கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி, 100 கிலோ எடை கொண்ட 300 மீட்டர் அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க ஏற்றப்பட்டது. 

அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தனர். மேலும் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டை பகுதி வீதிகளிலும் நின்று திரளான பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என பக்திபரவசத்துடன் முழக்கமிட்டவாறு வழிபாடு செய்து, தங்களது வீடுகளில் அகல்விளக்கு மற்றும் குத்துவிளக்கில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபட்டனர். திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறையினர் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர்.

இன்று மாலை ஏற்றபடும் இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து  இரவும் பகலும் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல இல்லந்தோறும் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn