கலப்பட வெல்லம் விற்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கலப்பட வெல்லம் விற்பவர்கள் மீது கடுமையான  நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

வெல்லம் மொத்த விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு கலப்படமில்லாத வெல்லத்தினை விற்பனை செய்வதை நோக்கமாக விழிப்புணர்வு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு முன்னிலை வகித்து கருத்துரை வழங்கினார்.

மேலும் வெல்லம் சங்கத்தை சார்ந்த பிச்சை, செந்தில், பாலசுப்பிரமணி மற்றும் வணிகர் சங்க பேரமைப்பு செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறுகையில் உணவு வணிகர்கள் யாரும் கலப்பட வெல்லத்தை கொள்முதல் மற்றும் விற்பனை செய்யக்கூடாது என்று கூறினார். நல்ல வெல்லம் நிறம் என்பது கரு அரக்கு நிறத்தில் இருக்கும் என்றும், கெட்ட வெல்லம் சல்பர் கலக்கப்பட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றும், கலப்பட வெல்லத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ளும் போது புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் நல்ல வெல்லமான கரு அரக்கு நிறத்தில் உள்ள வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு மட்டுமல்லாமல் எப்போதும் திருச்சி மாவட்டத்தில் கலப்பட வெல்லம் விற்பனை செய்யக்கூடாது, மீறி விற்பனை செய்பவர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 இல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

இந்த கூட்டத்தில் நல்ல வெல்லம் மற்றும் கலப்பட வெல்லம் உணவு வணிகர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் பொதுமக்கள் கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள எங்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். 9944959595 / 9585959595

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn