வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்

வேப்பிலை மாரியம்மன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரின் மையப்பகுதியில் மிகவும் புகழ்பெற்ற வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடைபெறும். இதே போல் இந்த ஆண்டும் திருவிழா ஏப்ரல் 21 ம்தேதி பூச்சொரிதழ் விழாவுடன் துவங்கி தொடர்ந்து 28 ம் தேதி காப்பு கட்டுதல் விழாவும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து தினசரி மண்டகப்படி விழாக்கள் நடைபெற்றது வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பால்குட விழா இன்று காலை தொடங்கி நடைபெற்றது. வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு பின் பால்குட ஊர்வலம் தொடங்கி ராஜவீதிகள் வழியாக மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக பக்தி பரவசத்துடன் பால்குடமெடுத்து வந்தனர்.

இதுமட்டுமின்றி சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆரவாரத்தோடு இந்த பால்குட விழாவில் பங்கேற்றனர். பக்தர்கள் கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாலால் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கோவில் முன்பு பச்சை மூங்கிலில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.

இதுமட்டுமின்றி விழாவில் வேண்டுதல் குழந்தை வரம்கேட்டு நிறைவேறிய பலரும் தங்களின் குழந்தைகளை கரும்பு தொட்டிலில் கட்டி சுமந்து சென்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய திருவிழாவான பால்குட விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் மணப்பாறை நகரமே மக்கள் வெள்ளத்தில் உள்ளது.

இந்த திருவிழாவால் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நாளை காலை பொங்கலிடுதல், அக்னிசட்டி மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் மாலை வேடபரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision