ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத் தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற பூபதித்திருநாள் எனப்படும் தைதேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷமிட்டபடி, பக்தி பரவசத்துடன் வடம் பிடித்தனர்.

வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைமாதத்தில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைத்தேர் உற்சவமானது கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

அன்று முதல் திருச்சிவிகை, ஹம்ச, யாளி, இரட்டை பிரம்பை, கருட, குதிரை, சேஷம், ஹனுமந்தம், கற்பக விருட்சிக, யானை ஆகிய வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய 9ம்திருநாளான இன்று அதிகாலை உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. அதன் பின்னர் திருத்தேரில் உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் எழுந்தருளினார். காலை 6 மணிக்கு நம்பெருமாள் எழுந்தருளிய திருத்தேரின் வடத்தை பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா ரெங்கா கோஷமிட்டபடி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி நம்பெருமாள் எழுந்தருளிய திருத்தேரானது நான்கு வீதிகளில் வலம் வந்தது.  ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு 3 தேரோட்டங்கள் நடைபெறும், மற்ற தேரோட்டங்களில் நம்பெருமாள் மட்டுமே தேரில் எழுந்தருளி வலம் வருவார். ஆனால் இந்த பூபதித்திருநாள் எனப்படும் தை தேரோட்டத்தில் மட்டுமே நம்பெருமாள் உபயநாச்சியாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தை தேரோட்டத்தினை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய
  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn