திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருச்சி மாநகரம், வரகனேரி பஜார், தஞ்சாவூர் ரோடு, அந்தோணியார் கோவில் தெருவில் வசித்துவரும் பாஷா (55) மூத்த மகள் பெனாசிர் பாத்திமா என்பவர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் அவரது கணவர் அபுல்ஹசன், என்பவருடன்
வசித்து வந்ததாகவும், பின்னர், கடந்த 14.06.2021-ஆம் தேதி தனது மருமகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து இறந்து விட்டதாகவும், எனவே தனது மகளின் வாழ்க்கைக்கு உதவி செய்ய வேண்டி கடந்த 16.08.2021-ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 12.10.2021-ஆம் தேதி மதியம் 3.00 மணியளவில் மேற்படி பாஷாவின் வீட்டிற்கு வந்த ஒருவா் தன்னுடைய பெயர் தேவபிரசாத் என்றும், தான் திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவதாக அறிமுகம் செய்து கொண்டு, தனது மகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி தொகை ரூ.5,50,000/- மற்றும் 
கல்வித்துறையில் வேலை பெறுவதற்கு ஆய்வு மேற்கொள்ள வேண்டி வந்திருப்பதாக தெரிவித்து, உதவி தொகை பெறுவதற்கு ரூ.30,000/- வரி கட்டவேண்டும் என்றும், வங்கி கணக்கு எண்.40006867151 என்ற ஸ்டேட் வங்கி கணக்கில் பணம் செலுத்த கூறியதாகவும்,

தனது மகளின் செல்போனை வாங்கி, அதில் தனது மருமகன் தூக்கு போட்டு இறந்த சம்பவ இடத்தை செல்போனில் படம் பிடித்துள்ளதை அலுவலகத்தில் காட்ட வேண்டும் என்று கூறி, தனது மகளின்
செல்போனை வாங்கி சென்று விட்டதாகவும், பின்னர் வரி பணம் ரூ.30,000/-த்தை மேற்கண்ட வங்கி 
கணக்கில் செலுத்துமாறு செல்போனில் அடிக்கடி பேசி கேட்டதாகவும், இதனால் தனக்கு அவரின் மேல் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, அங்கு இதுபோல் யாரையும் அனுப்பவில்லை என்று தெரிவித்ததாகவும், தன்னை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மேற்படி மோசடி நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு 
கொடுத்துள்ளார்.

இப்புகார் மனுவை பெற்ற சைபர் கிரைம் காவல் நிலைய போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களது அலுவலக பெயரை பயன்படுத்தி, தனது பெயர் தேவபிரசாத் என்றும், வருவாய் ஆய்வாளர் என்றும் போலியாக கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட எதிரியான சேலம், கண்ணங்குறிச்சி, வ.உ.சி நகரைச் சேர்ந்த பிரபாகரன் (35), என்பவரை நேற்று 20.10.2021-ஆம் தேதி கைது செய்து அவர் மீது திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்து, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களது அலுவலக பெயரை பயன்படுத்தி, தனது பெயர் தேவபிரசாத் என்றும், வருவாய் ஆய்வாளர் என்றும் போலியாக மோசடியில் ஈடுபட்ட எதிரியை கைது செய்த சைபர் கிரைம் காவல் நிலைய போலீசாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், வெகுவாக பாராட்டினார்கள். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்று அரசு அலுவலகங்களின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான, கடுமையான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் 
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn