திருச்சி அதிகாரி வீடு, லாக்கரில் 160 சவரன் தங்கம், 1 கோடி மதிப்பிலான 2 வீடு சோதனையில் அதிர வைக்கும் தகவல்

திருச்சி அதிகாரி வீடு, லாக்கரில் 160 சவரன் தங்கம், 1 கோடி மதிப்பிலான 2 வீடு சோதனையில் அதிர வைக்கும் தகவல்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் அலுவலகம் உள்ளது. இங்கு பல்வேறு தொழில்களுக்கு கடன் பெறுவதற்கான திட்ட அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது. தொழில் முனைவோருக்கு கடன் வழங்க இந்த அலுவலகம் மூலம் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

இந்நிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய பயனாளிகளிடம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. இதன் அடிப்படையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், பொறியாளர் கம்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமேலாளர் ரவீந்திரன் அறையில் 3 லட்சம் இருந்தது. அந்த பணத்திற்கான எந்த ஆவணமும் இல்லை. இதுபற்றி விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த பணத்தையும், மேலும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து திருச்சி உறையூரில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத 6 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவிகள் 3 கைப்பற்றப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இன்று வங்கிக்கு ரவீந்திரனை அழைத்துச்சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் லாக்கரை திறந்து சோதனை நடத்தினர்.

அதில் 160 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ 250 கிராம் வெள்ளி நகைகளும் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான இரண்டு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஆவணங்களும் இருந்தது தெரியவந்தது. நகை மற்றும் குடியிருப்பு வாங்குவதற்கான எந்தவித உரிய ஆவணமும் இல்லாத நிலையில் இதுகுறித்து முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன் மற்றும் பொறியாளர் கம்பன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருவெறும்பூரில் உள்ள பொறியாளர் கம்பன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சிறு தொழில் தொடங்க ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மாவட்ட தொழில் மையத்தை நாடி தங்கள் பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்திக்கொள்ள அணுகும் போது இதுபோன்ற அதிகாரிகள் அதிக அளவு லஞ்சம் கேட்கும் நிலை தொடர்வதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO