டயர் வெடித்து விபத்துக்குள்ளான லாரி - லேசான காயத்துடன் உயிர் தப்பிய ஓட்டுநர்

டயர் வெடித்து விபத்துக்குள்ளான லாரி - லேசான காயத்துடன் உயிர் தப்பிய ஓட்டுநர்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வேலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்ராமன் மகன் பிரகாஷ் (23). இவர் கனரக லாரியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.

லாரியில் சுமார் 30 டன் சிமெண்ட் மூட்டைகள் இருந்துள்ளன. இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இ.வெள்ளனூர் பகுதியில் உள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று லாரியின் நடுப்பகுதியில் உள்ள டயர் வெடித்தது. இதனால் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறி கெட்டு ஓடியது.

டிரைவர் லாரியை கட்டுக்குள் கொண்டுவர முயன்றார். எனினும் லாரி கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து பாலத்திலிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு அருகில் சர்வீஸ் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision