“வானகம்” - "வாழ்வியல் உலா" இயற்கை வாழ்வியல் பயணம்

“வானகம்” - "வாழ்வியல் உலா" இயற்கை வாழ்வியல் பயணம்

எம்.ஏ.எம்.மேலாண்மை கல்லூரி மற்றும் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றத்துடன் இணைந்து ஒரு நாள் இயற்கை வாழ்வியல் பயணமாக கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் சுருமான் பட்டியிலுள்ள வேளாண் பெரியார் அய்யா கோ.நம்மாழ்வாரின் "வானகம்" உயிர்ச்சூழல் நடுவம் பண்ணைக்கு 50 மாணவர்கள் "வாழ்வியல் உலா" பயணம் மேற்கொண்டனர். எம்.ஏ.எம்.மேலாண்மை கல்லூரி இயக்குனர் எம்.ஹேமலதா நிகழ்ச்சியை வரவேற்று, இந்த களப்பயணத்தின் ஏற்பாட்டின் நோக்கத்தை எடுத்துரைத்தார். தண்ணீர் அமைப்பு தலைவர் கே.சி.நீலமேகம் வாழ்த்துரை வழங்கி, தண்ணீர் அமைப்பு நோக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

தண்ணீர் அமைப்பு நிர்வாக குழு ஆர்.கே.ராஜா, மாணவர் அணி ஆகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தண்ணீர் அமைப்பு செயலாளர் கே.சதீஷ்குமார்... சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். மேலும் அவர் இயற்கையானது இறைவனின் வரம் என்றும், இயற்கையை பெருமளவில் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என்றார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாணவர்களும் "பொன்னனியாறு” அணையில் இயற்கை வாழ்வியல் பயணமாக நடைபயணம் செய்தனர். அங்கு பேராசிரியர் கே.சதீஸ் குமார், இயற்கையின் சாராம்சம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் வளர்ச்சிக்கு அது எவ்வாறு துணைபுரிகிறது என்பது குறித்து உரையாற்றினார்.

கார்த்திக் ராஜா, “வானகம் நம்மாழ்வார் சுற்றுச்சூழல் அறக்கட்டளை” பற்றி நம்மாழ்வாரின் வார்த்தைகளால் முன்னிலைப்படுத்தி தொடங்கினார். “வானகம்”: இயற்கை வழி வேளாண்மை – வாழ்வியலுக்கான ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கூடம் எனவும், நிலையான மற்றும் பாதுகாப்பான இயற்கை வேளாண் முறைகளை நாடெங்கும் உள்ள உழவர்களுக்கு பயிற்சியளிப்பது இதன் குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகள் என்று மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். “மாற்றம் என்பது சொல் அல்ல செயல்” என்றும், நம்மாழ்வார் இயற்கை எய்திய பின்னர் அவரோடு பயணித்த நபர்களை உள்ளடக்கி வானகம் செயல்பட்டு வருகிறது என்று மாணவர்களிடம் கூறினார். மேலும் அவர் வானகம் பற்றிய மேலோட்டப் பார்வையைப் பற்றி விவாதித்தார், 

வானகம் நம்மாழ்வார் சுற்றுச்சூழல் அறக்கட்டளை அமைப்பின் தொலைநோக்குப் பார்வைகளான "நஞ்சில்லா உணவு”, “மருந்தில்லா மருத்துவம்”, “சுவரில்லா கல்வி" மற்றும் இயற்கை விவசாய முறைகள் மற்றும் அதன் நன்மைகள் பற்றி எடுத்துக்கூறினார். மானாவாரி விவசாயிகளை மேம்படுத்துவது, மேட்டுப்பாத்தி, வட்டப்பாத்தி அமைத்தல், தினை, பயறு வகைகள் மற்றும் இதர மானாவாரி பயிர்கள் குறித்த ஆராய்ச்சி, விவசாயிகளுக்கு முறையான பயிற்சி போன்றவை வானகத்தின் செயல்பாடுகளாகும் எனவும், மேலும் இயற்கை விவசாயம் மற்றும் அதன் நுணுக்கங்களை  பற்றி எடுத்துக்கூறினார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வானகத்தில் உள்ள நம்மாழ்வார் இல்லம், பரண், வயல்களுக்கு மாணவர்கள் சென்று, இயற்கை வழி வேளாண்மை மற்றும் மழை நீர் அறுவடை, இடுபொருள் செய்முறை பயிற்சி தொடர்பான பல்வேறு நுணுக்கங்களை அறிந்து கொண்டனர். இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் நிலையான வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்வதற்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான நோக்கத்திற்கு இந்த களப்பயணம் நிச்சயமாக உதவியது. 

எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரியின் உதவிப் பேராசிரியர்கள் S.தேவிபாலா மற்றும் F.ஐரிஸ் ரினால்டி ஆகியோர் மாணவர்களுடன் வருகை தந்து  வழி காட்டினர். எம்.ஏ.எம். மேலாண்மை கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் S.பிரசன்னா இந்நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH           

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO