இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது...!

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது...!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (வயது 50). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி அமிர்தம் (45) என்பவர் எதுமலை கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவர் இறப்புச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 1000 கேட்டுள்ளார். இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு அமிர்தம் தகவல் கொடுத்தார். தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஏதுமலை கிராம நிர்வாக அலுவலகத்தில் பணியில் இருந்த சுரேசிடம் ரசாயனப் பொடி தடவிய பணத்தை கொடுக்கும் படி அமிர்தத்திடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்படி ரசாயனப் பொடி தடவிய பணத்தை சுரேஷ் அமிர்தம் கொடுத்தார். அதனை சுரேஷ் பெற்றுக் கொண்டதும், அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் சுரேசை கைது செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO