திருச்சியில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர்கள் தொடங்கி வைப்பு!!

திருச்சியில் அம்மா மினி கிளினிக் - அமைச்சர்கள் தொடங்கி வைப்பு!!

Advertisement

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் மருத்துவ வசதிக்காக 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். முதற்கட்டமாக சென்னையில் அம்மா மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 64 அம்மா மினி கிளினிக்குகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம், ஶ்ரீரங்கம் என கோட்டங்களுக்கு தலா ஒரு மினி கிளினிக் என மொத்தம் 4 , நகராட்சி பகுதிகளுக்கு 3, புறநகர் பகுதிகளுக்கு 57 என மொத்தம் 64 அம்மா மினி கிளினிக் திறக்கப்படுகிறது. 

இந்த அம்மா மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ உதவியாளர் என 3 பேர் பணிபுரிவார்கள். இங்கு சளி, காய்ச்சல் மற்றும் சர்க்கரை போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மேலும், திருச்சி மாவட்டத்தில் 64 அம்மா மினி கிளினிக் இன்று முதல் இம்மாதம் 31 தேதிக்குள் முழுமையாக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று திருச்சியில் 2 இடங்களான சங்கிலியாண்டபுரம் எம்ஆர் ராதா நகர் மற்றும் தென்னூர் மின் அலுவலகம் அருகிலும் துவங்கப்பட்டது. இந்த மினி கிளினிக்கை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் நகர்நல அலுவலர் யாழினி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.