மக்களவை தேர்தல் 2024 - திருச்சியில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் - மூன்றடுக்கு பாதுகாப்பில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

மக்களவை தேர்தல் 2024 - திருச்சியில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் - மூன்றடுக்கு பாதுகாப்பில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். மூன்றடுக்கு பாதுகாப்பில் மத்திய, மாநில போலீஸாா், துணை ராணுவப் படையினா் என 1000-க்கும் மேற்பட்டோா் பணியில் உள்ளனா்.

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட திருச்சி மேற்கு, கிழக்கு, திருவெறும்பூா், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை, கந்தா்வக்கோட்டை ஆகிய 6 பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜமால் முகமது கல்லூரியில் 3 அடுக்குப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 117 நுண் பாா்வையாளா்கள், 116 மேற்பாா்வையாளா்கள், 130 உதவியாளா்கள், 1,251 முகவா்கள் ஈடுபடுகின்றனா். இவா்கள் தவிர அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணிக்காக 13 கூடுதல் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

6 பேரவைத் தொகுதிகளிலும் பதிவான 10 லட்சத்து 49 ஆயிரத்து 93 வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் 8,658 சோ்த்து மொத்தம் 10,57,751 வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 25 சுற்று, திருச்சி மேற்கு 20, திருச்சி கிழக்கு 19, திருவெறும்பூா் 22, கந்தா்வக்கோட்டை 18, புதுக்கோட்டை 19, தபால் வாக்குகளுக்கு ஒரு சுற்று என மொத்தம் 124 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தற்போது காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னா், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி அந்தந்த பேரவைத் தொகுதி வாரியாக நடைபெறும்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அவசர ஊா்தியுடன், மருத்துவக் குழுவினரும் தயாராக உள்ளனா். காலை 11 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகளைக் கண்காணிக்க 3 பேரவைத் தொகுதிகளுக்கு தலா ஒரு பாா்வையாளரை இந்தியத் தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதன்படி ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பாா்வையாளராக தினேஷ்குமாரும், திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 3 பேரவைத் தொகுதிகளுக்கு ராஜீவ் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இருவரும் திருச்சிக்கு நேற்று வந்து, தோ்தல் நடத்தும் அலுவலருடன் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்து, வாக்கு எண்ணும் மையத்தையும் பாா்வையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமாரிடம் ஆலோசனை வழங்கினா்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision