மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையீடு

மனரீதியாக, உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையீடு

ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி துணை காவல்துறை கண்காணிப்பாளர் யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்ட கணினிசார் பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அதேபோன்று டெல்லியில் ஜெரால்டை கைது செய்து ரயில் மூலம் அழைத்து வந்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். பின்னர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம், சவுக்கு சங்கரை 7நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் கோவை ஜெயில் இருந்து சவுக்கு சங்கரை பெண் போலீசார் நேற்று முன்தினம் திருச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

பின்னர் நேற்று காலை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சவுக்கு சங்கர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜபடுத்தப்பட்டார். அப்போது சவுக்கு சங்கரின் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் காவல்துறையினர் கஸ்டடிக்கு அனுமதி அளிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயப்பிரதா சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

அதைத் தொடர்ந்து அவரை திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் காவல் நிலையத்திற்கு நேற்று அழைத்து சென்று அங்கே விடிய விடிய போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதற்கு பின்னணியில் யார் யார்? கேட்டனர். அதற்கு பதிலளிக்கும் போது, யாரும் என்னை தூண்டவில்லை. ஆளுங்கட்சியை விமர்சிப்பது தான் ஜானலிசம். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியாக இருந்தபோது அவரை விமர்சனம் செய்துள்ளேன். பெண் போலீசார் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டேன். அது தப்புதான். அதை இப்போது உணர்ந்துள்ளேன் என கூறியதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று போலீஸ் காவல் முடிந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பின் மீண்டும் இன்று மாலை 04:00 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் போலீசார் அஜர்படுத்தினர். நீதிபதி ஜெயபிரதா முன்பு ஆஜரான சவுக்கு சங்கரிடம் விசாரணை முறையாக நடத்தப்பட்டதா உங்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டது என கேட்டார்? அதற்கு அனைத்தும் வழங்கப்பட்டது விசாரணையில் துன்புறுத்தப்படவில்லை என்றார்.

மேலும் கோவை சிறையில் தனக்கு உளவியல் ரீதியாக பிரச்சனை ஏற்படுவதால் மிகுந்த மன அழுத்தம் அதிகமாக ஏற்படுகிறது. எனக்கு மருத்துவ உதவியும் தனி வார்டு, சென்னை அல்லது திருச்சியில் வழங்க வேண்டும் கோரிக்கை வைத்தார். அதனை நீதிபதி மனுவாக வழங்குங்கள் பரிந்துரை செய்கிறேன் என தெரிவித்தார். தொடர்ந்து ஏற்கனவே கோவை நீதிமன்ற உத்தரப்படி 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உள்ளதால் கோவை சிறைக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் முல்லைசுரேஷ்..... நேற்று மாலை 4 மணி அளவில் ஏ.டி.எஸ்.பி கோடிலிங்கம் கஸ்டடிக்கு எடுத்துச் சென்று ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். 3 முறை வழக்கறிஞர்கள் நேரில் சென்று சந்திக்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுப்படி சவுக்கு சங்கரிடம் விபரங்களை கேட்டு அறிந்தோம். எனக்கு எந்த பிரச்சினை இல்லை என்று அவரை எங்களிடம் தெரிவித்தார். நீதிபதி மனரீதியாக உடல் ரீதியாகவோ துன்புறுத்த பட்டதா என சவுக்கு சங்கரிடம் கேட்டார். எந்த துன்புறுத்தலும் இல்லை என்று தெரிவித்தார்.

கோவை சிறையில் மனநலம் பாதிக்கப்பட்ட பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பிளாக்ல் இருந்து வேற பிளாக்கிற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்று கோவை சிறை கண்காணிப்பாளருக்கு எழுத்துப்பூர்வமாக பரிந்துரை செய்துள்ளார். திருச்சியில் அவர் மீது உள்ள வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளோம். அவர் வேறு சிறைக்கு மாற்ற வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உத்தரவு கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision