பார்சல் சர்வீஸ் வேன், கார் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்

பார்சல் சர்வீஸ் வேன், கார் மோதி விபத்து - 5 பேர் படுகாயம்

நாமக்கல் மாவட்டம், அவனியாபுரம் பகுதியை சேர்ந்த சரசு (52) மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் காரில் நேற்று இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்துள்ளனர். அப்போது மணமேடு கொண்டாம்முட்டி பாலம் அருகே திருச்சியில் இருந்து சேலம் நோக்கி சென்ற பார்சல் சர்வீஸ் வேனும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் வந்த சரசு (52), இவர்களது மகன்கள் ரகுபதி (28), ரமேஷ் (25), சண்முகம் (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அப்பகுதியினர் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்ட நிலையில் காரை ஓட்டி வந்த சண்முகம் சிக்கி கொண்டார். இதையடுத்து முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் மீட்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி சண்முகத்தை மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த சண்முகம் மற்றும் அவரது தாயார் சரசு, சகோதரர்கள் ரகுபதி, ரமேஷ் ஆகிய நான்கு பேரையும் முசிறி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இதில் சண்முகம் கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பார்சல் சர்வீஸ் வேனை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம் செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்த ஐயப்பா மற்றும் கிளீனர் சிலம்பரசன் ஆகிய இருவரும் காயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision