திறந்த நிலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திறந்த நிலையில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை  - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை உணவு வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து, பொது மக்களுக்கு பாதுகாப்பானஉணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பாதுகாப்பற்ற மற்றும் தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. வணிகர்களுக்கெதிராக வழக்கு தொடர்வது இந்நிலையில், வடை கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை ஈக்கள் மொய்க்கும் வண்ணமும் தூசிகள் படியுமாறும் திறந்த நிலையில் விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்புத் துறையின் ஆய்வின் போது அறியப்படுகின்றது. மேலும், அக்கடைகளில் பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப பயன்படுத்துவதும், அடுப்பில் சூடாகப்பயன்படுத்திக்கொண்டிருக்கும் எண்ணெயுடன் புதிய சமையல் எண்ணெயை சேர்ப்பதும் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வணிகர்கள் மேற்கூறிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு அச்சிட்ட நியூஸ் பேப்பர் மற்றும் காகிதங்களில் வைத்து பரிமாறுவதும், பார்சல்கட்டுவதும், FSSAI-ல் அனுமதிக்கப்படாத உணவுத் தரமற்ற பிளாஸ்டிக்கை பயன்படுத்தி உணவுப் பொருட்களை பரிமாறப் பயன்படுத்துவதும் ஆய்வுகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.

வணிகர்களின் இம்மாதிரியான பாதுகாப்பற்ற வணிகப் பழக்கவழக்கங்கள் பொதுமக்களின் பொது சுகாதார நலனிற்கு ஊறு விளைவிப்பதாகும். அதாவது, ஈக்கள் மொய்க்கும் வண்ணமும் தூசிகள் படியுமாறும் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் உண்பதால், அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் ஏற்படவும், பயன்படுத்திய எண்ணெயைத் திரும்ப பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு இரத்தக்கொதிப்பு, இரத்தநாள அடைப்பு மற்றும் புற்றுநோய் வரவழைக்ககூடியதற்கு காரணமாக அமைந்து வருகிறது. மேலும் அச்சிட்ட நியூஸ் பேப்பரில் விநியோகிக்கப்படும் உணவுப்பொருட்களைத் தொடர்ந்து உண்ணும் பொதுமக்களுக்கு அப்பேப்பரின் அச்சு மையில் உள்ள காரியத்தினால், வயிற்றுப்புண் ஏற்பட்டு பின்னாளில் அது கேன்சராக உருவெடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே, பொதுமக்களின் பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, வணிகர்கள் பின்வரும் உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்படுகின்றது. வடை, பஜ்ஜி, முட்டைக்கோஸ், பப்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களை மூடி உள்ள கண்ணாடிப் பெட்டியினுள் வைத்தும், அதை வாழை இலை மற்றும் வெள்ளை பேப்பரில் விரித்து வைத்து இருக்க வேண்டும் என்றும் பணியாளர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும் என்றும், சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தாமல் அதை பயோடீசல் தயாரிப்பாளர்க்கு விற்பனை செய்வதினால் பொது மக்களுக்கு புற்றுநோய் வராமல் தடுக்கபடலாம். அதேபோல உணவு வணிகர்கள் FSSAI-ல் அனுமதிக்கப்பட்ட உணவுத் தரத்தில் உள்ள பிளாஸ்டிக்கை மட்டும் தான் உணவுப் பொருளை வைத்து பொட்டலமிடவும், பார்சல் கட்டவும் பயன்படுத்த வேண்டு என்றும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் மற்றும் குட்கா போன்ற புகையிலைபொருள்களை தொடர்ந்து விற்பனை செய்யக்கூடாது என்றும் மாவட்டஆட்சித்தலைவர் சு.சிவராசு எச்சரிக்கை செய்துள்ளார். எனவே, உணவு வணிக உரிமையாளர்கள் மேற்கூறிய உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றது. தவறும்பட்சத்தில், எந்தவொரு முன்னறிவிப்பின்றி பாதுகாப்பற்ற முறையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கப்படுவதுடன், வணிகர்களது விதிமீறல்களுக்கேற்ப உணவு பாதுகாப்புத்துறையால் அபராதம் விதிக்கவோ அல்லது வழக்கு பதிவு செய்யவோ உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO