முதன்முறையாக கடிதம் எழுதி கவனம் ஈர்த்த மாணவ மாணவிகள்

முதன்முறையாக கடிதம் எழுதி கவனம் ஈர்த்த மாணவ மாணவிகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 278 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மாணவ, மாணவியர்களிடையே பொது சிந்தனை, நல்லறிவு, ஒழுக்கம் ஆகியவை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் டி.ராஜசேகரன், அவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தி தந்து வருகிறார்.

அவ்வகையில் மாணவ மாணவியர்களிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாணவ மாணவியர்கள் இந்திய அஞ்சல் துறையிலிருந்து பெறப்பட்ட இன்லேண்ட் லெட்டரில் அவரவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடிதம் எழுதினர்.

மாணவ - மாணவியர்கள் எழுதிய கடிதங்களில் அவர்களுக்கு வீட்டில் கிடைக்கின்ற அன்பு, நல்ல விஷயங்கள் குறிப்பிட்டு எழுதியிருந்தனர். சில மாணவர்கள் தங்களது தந்தைக்கு அவர்கள் செய்கின்ற தவறுகள், போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவதையும், வாகன சட்டங்களை மதித்து தலை கவசம் அணிவதையும் வலியுறுத்திருந்தனர். சிலர் தாங்கள் படித்து, அடையக்கூடிய குறிக்கோள் குறித்தும் பெற்றோர்களுக்கு தெரிவித்திருந்தனர்.

இது தவறான வழியில் செல்லும் பெற்றோர்களை நல்வழிப்படுத்தும் கேடயமாக இருக்கும் என பள்ளி ஆசிரியர்கள் நம்புகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO