மாநகர அரசு பேருந்தில் இருக்கையோடு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்.

மாநகர அரசு பேருந்தில் இருக்கையோடு ரோட்டில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து திருச்சி கே.கே.நகர் நோக்கி மதியம் அரசு நகரப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டினார். நடத்துனராக திருச்சி எடமலைபட்டிபுதூரை சேர்ந்த முருகேசன் (54) பணியாற்றினார். பிற்பகல் 3:30 மணி அளவில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து சென்றது. 

இந்த பேருந்தில் பயணிகள் அதிகம் இல்லாததால் கடைசியில் இருந்து வலது புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் முருகேசன் உட்கார்ந்திருந்தார். மாநகரப் பேருந்துகளில் நடத்துனருக்கு என்று தனி இருக்கை கிடையாது. அந்த பேருந்து கலையரங்கம் தியேட்டரை கடந்து பத்திரிகை அலுவலகம் அருகே வலது புறம் திரும்பியது. அப்போது நடத்துனர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்து படிக்கட்டு வழியாக ரோட்டில் வந்து விழுந்தது. இதில் உட்கார்ந்து இருந்த நடத்துனர் முருகேசன் தூக்கி வீசப்பட்டார்.

இதில் ரோடில் விழுந்ததில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டதை தொடர்ந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்து பார்த்தனர். காயமடைந்த நடத்துனர் முருகேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடைந்து ரோட்டில் விழுந்து கிடந்த இருக்கையை தூக்கி பேருந்தில் வைத்துக் கொண்டு மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இதில் வந்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருச்சியில் அரசு பேருந்தில் இருக்கை கழண்டு வெளியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பேருந்துகளின் தரம் எந்த நிலையில் உள்ளது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision