திருச்சி அருகே வயல்வெளியில் கிடந்த எலும்புக்கூடு அடையாளம் கண்டுபிடிப்பு

திருச்சி அருகே வயல்வெளியில் கிடந்த எலும்புக்கூடு அடையாளம் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே செவந்தலிங்கபுரம் பகுதியில் உள்ள கோரை பயிரிடப்பட்டிருந்த வயலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (18.06.2023) அடையாளம் தெரியாத ஆண் எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின்பேரில் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் எலும்பு கூட்டை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டியில் வசிக்கும் இறந்தவரின் மகள் லதா மற்றும் மருமகன் ஆகியோர் முசிறி காவல் நிலையத்திற்கு வந்து எலும்புக்கூடு கிடந்த பகுதியில் இருந்த உடைகளை பார்த்து அடையாளம் காட்டினர். 

லதா இறந்து போனது தனது தந்தை நடேசன் தான் என அவர் அணிந்திருந்த உடைகளை வைத்து உறுதிப்படுத்தினார். நடேசன் இளம்வயதில் எண்ணெய் வியாபாரம் செய்து வந்ததாகவும், சில வருடங்களுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு சுற்றித் திரிவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து நடேசன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்தும், இறந்து போனது நடேசன் தானா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனைக்கு சென்னை ஆய்வகத்திற்கு எலும்புக்கூடு மற்றும் உறவினர்களின் ரத்த மாதிரியை அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். கோரை பயிர் காட்டில் எலும்பு கூடாக கிடந்தவர் யார் என்பது அடையாளம் காணப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத் தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn