மாநகராட்சியால் புறக்கணிக்கப்படும் வார்டு - பொதுமக்கள் வேதனை

மாநகராட்சியால் புறக்கணிக்கப்படும் வார்டு - பொதுமக்கள் வேதனை

திருச்சி மாநகராட்சி 41வது வார்டுக்கு உட்பட்டது திருவெறும்பூர் நேதாஜி நகர் பகுதி. இந்த நகரில் உள்ள நான்கு தெருக்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொது கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பொது கழிப்பிடத்தில் உள்ள மின் மோட்டார் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பழுதாகியது.

மேலும் கழிவரையின் கதவுகள் உடைந்தும், தெருநாய்கள் உறங்கும் கூடாரமாக மாறி உள்ளது. அதனை சரி செய்து கொடுக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வார்டு கவுன்சிலரிடம் பலமுறை எடுத்துக் கூறியும், அவர்கள் செய்து கொடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேலும் பொதுக் கழிவறை சரியாக இல்லததால் அப்பகுதி மக்கள் இயற்கை உபாதைக்கு முட்காட்டு பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேலும் அந்த பகுதியில் ஒரு குடிநீர் தொட்டி மட்டுமே உள்ளது. மேலும் ஒரு குடிநீர் தொட்டி வேண்டும் என பல நாட்களாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை செய்து கொடுக்கவில்லை . இதனால் குடிநீர் தொட்டியில் பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. இது மட்டுமின்றி கழிவுநீர் வடிகால் கால்வாய் சுத்தம் செய்வதே இல்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்உள்ளது.

அதேபோல் சாலை வசதி செய்து கொடுக்கப்படவில்லை, தெருவிளக்குகள் எரிவதில்லை, மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது என அடுக்கடுக்காக தங்கள் பகுதியில் உள்ள குறைகளை கூறுவதுடன் தங்களது பகுதியை மாநகராட்சி நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியை (ஜேயி ) தொலைபேசியில்தொடர்பு கொண்ட பொழுது அவர் நமது அழைப்பிற்கு பதில் அளிக்கவில்லை 

திருச்சி மாநகராட்சி 41 வது வார்டுக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதியை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision