திருச்சியில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழப்பு - மற்றொரு காளை உயிருடன் மீட்பு

திருச்சியில் 2 ஜல்லிக்கட்டு காளைகள் உயிரிழப்பு - மற்றொரு காளை உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள் பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 666 காளைகள் கலந்து கொண்டன.

ஜல்லிக்கட்டின போது, மதுரை மேலூரில் இருந்து கொண்டுவரப்பட்ட காளை சீறிப்பாய்ந்து சென்றதில் வாடிவாசல் அருகே உள்ள கிணற்றில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த காளை பரிதாபமாக இறந்தது. இதேபோல் அரியலூர் மாவட்டம் இலந்தகுடம் கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட காளையை அவிழ்க்க முயன்ற போது, காளையின் உரிமையாளரை கொம்பால் குத்தியது.

இதனால் காளை உரிமையாளரின் பிடியில் இருந்து விலகி கயிற்றுடன் ஓடியது. இதில் கயிறு கழுத்தை இறுக்கியதில் காளை உயிரிழந்து. இதனை தொடர்ந்து வழுதியூரைச் சேர்ந்த பாலாஜி என்பவருடைய காளை ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட போது குமுளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 50 அடி ஆழத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஜல்லிக்கட்டு காளை தவறி விழுந்தது.

இது குறித்து புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்பு நிலை அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 10க்கு மேற்பட்ட வீரர்கள் 1 மணி நேரம் போராடி காளையை உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் காயம் அடைந்த அந்த காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn