தாய்ப்பால் பாதுகாத்தல் அனைவருக்குமான பொறுப்பு - உலக தாய்ப்பால் வாரம்

தாய்ப்பால் பாதுகாத்தல் அனைவருக்குமான பொறுப்பு - உலக தாய்ப்பால் வாரம்

பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப் பால். இந்த தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தீம் எனும் கருப்பொருளுடன் குறிக்கப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் வாரத்திற்கான கருப்பொருள் "தாய்ப்பால் பாதுகாத்தல் அனைவருக்குமான பொறுப்பு" என்பதாகும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பின்பற்ற வேண்டியவை, குறிப்பாக தாய் பால் தானம் வழங்குபவர்கள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விரிவாக தங்களுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து உள்ளனர். அவற்றைப் பற்றி கூறுகிறது கட்டுரை  

டாக்டர்.அபிநயா, குழந்தைகள் நல மருத்துவர், தாய்ப்பாலூட்டுதல் நல ஆலோசகர் (நாமக்கல்)

தாய்ப்பாலை நேரடியாக பெறும் போது அன்பும், அரவணைப்பும் கிடைப்பதால், எதிர்காலத்தில் அதிக கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் குழந்தைக்கு ஏற்படாது. தாயின் கர்ப்பப்பை உடனே சுருங்குவதால் உதிரப்போக்கு குறைந்து விடும். பிரசவ காலத்தில் தாய்க்கு அதிகரித்த கொழுப்பு கரைந்து விடும். மார்பக புற்றுநோய் ஏற்படாது. பிரசவம் முடிந்தவுடன் சுரக்கும் சீம்பாலை குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக குழந்தைக்குக் கொடுப்பது அவசியம். இந்த சீம்பாலில் குழந்தைக்குத் தேவையான அத்தனை சத்துகளும் நிரம்பியுள்ளன.

குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பால் அளிக்க வேண்டும். முதல் 6 மாதங்களுக்கு பகலில் குறைந்தபட்சம் 6 முதல் 7 தடவையும். இரவில் 3 முதல் 4 தடவையும் தாய்ப்பால் அளிப்பது அவசியம். இவ்வாறு தொடர்ந்து தாய்ப்பால் அளித்து வந்தால் குழந்தையின் எடை கூடும், அடிக்கடி சளி பிடிக்காது, ஆஸ்துமா பிரச்சினைகள், வயிற்றுப்போக்கு ஏற்படாது. உடல் பருமன், இருதய நோய்கள் தவிர்க்கப்படும்.

தாய்ப்பால் கொடுக்கும் போது ஆக்ஸிடோசின் ஹார்மோன் (Oxytocin) தாயின் உடலில் அதிக அளவு சுரக்கும். இதனால் பிரசவத்தின் போது ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்கள் யாவும் சீராகும். உடல் எடையும் குறையும். எனவே, எந்தச் சூழ்நிலையிலும் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டாம். தாய்மார்கள் சாப்பிடும் உணவுக்கும் தாய்ப்பால் சுரப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் பிரெஸ்ட் பம்ப் மூலம் தாய்ப்பாலைச் சேகரித்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒரு முறை சேகரித்த பாலை அறையின் வெப்பநிலையில் எட்டு மணி நேரமும், ஃபிரிட்ஜில் 24 மணி நேரமும் வைத்திருந்து கொடுக்கலாம். ஃபிரிட்ஜில் வைத்திருந்த பாலை, வெளியே எடுத்து, அரை மணி நேரம் கழித்துதான் கொடுக்க வேண்டும்.

ஐஸ்வர்யா - தாய் பால் தானம் வழங்குபவர், திருச்சி 

எனக்கு இரண்டு குழந்தைகள். முதல் குழந்தை சென்னையில் பிறக்கும் பொழுது குழந்தைக்கு பாலூட்டும் போது இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு தொடர்ந்து சென்னையில் தாய்ப்பால் தானம்  வழங்கி வந்தேன். என்னுடைய குழந்தைக்கு அரசின் அறிவுரையின்படி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பாலூட்டினேன். தற்போது என்னுடைய இரண்டாவது குழந்தை பிறந்த தருணத்தில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் தேவை ஏற்பட்ட போது கடந்த ஒன்றரை மாதமாக தினமும் தொடர்ந்து வழங்கி வருகிறேன். இதனால் மனதளவில் பெரும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. கணவரின் ஒத்துழைப்பால் தொடர்ந்து செய்து வருகின்றேன். அவர் அளிக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் தொடர்ந்து செய்திட நம்பிக்கை அளிக்கிறது.

வினோதினி- திருச்சி

தாய்ப் பால் என்பது குழந்தைகளுக்கு கிடைக்கக்கூடிய மிகப் பெரிய ஊட்டச்சத்து.
தாய்ப்பால் என்பது தாய்க்கும் சேய்க்கும் ஆன உறவு. இதற்கு இடையில் வேறு யாருக்கும் எவ்வித தொடர்புமில்லை எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை ஆண்டுகள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை  அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதே போன்று குழத்தைக்கும்  உரிமை உண்டு. ஊட்டச்சத்து என்பதால் குழந்தைக்கு விருப்பமின்றியே தாய்ப்பால் புகட்டுவது தவறுதான்.ஆனால் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் தாய்ப்பால் தானம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கின்றது. மிக விரைவில் இது அனைவருக்கும் தெரியவர வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு   உயிரை காப்பதற்கும் அவர்களுடைய ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கு இது மிகவும் உதவும்.

டாக்டர். அழகு  அண்ணாமலை - மயக்க மருந்தியல் நிபுணர், திருச்சி

என்னுடைய குழந்தை பிறந்த பிறகு ஓரிரு நாட்கள் பால் குடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். பிறகு மருத்துவர்களின் உதவியோடு குழந்தைக்கு பால் தொடர்ந்து ஆறு மாதங்கள் பாலூட்டினேன். பின்னர் வேலைக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்ட போது வீட்டில் பாலை பம்ப் செய்து வைத்து விட்டு வந்தேன். திருச்சி பேரண்டிங் சர்க்கிள் மூலம் தாய்ப்பால் தானம் செய்வது குறித்து அறிந்து கொண்டு நாமும் செய்யலாம் என்று முன் வந்து தானம் செய்து வந்தேன்.

100 மி.லி தாய்ப்பால் தானம் செய்யும் பொழுது ஒரு குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து வழங்குவது அவர்களுடைய வளர்ச்சிக்கு உதவும் என்று நினைக்கும் பொழுதே மனதளவில் ஒரு மகிழ்ச்சியும் அடையும் தொடர்ந்து செய்திட வேண்டும் என்ற எண்ணமூம் பிறந்தது. பாலூட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்தால். பால் தானாக சுரக்கும். எனவே தாய்ப்பாலும் அமுத சுரபி போன்றது தான்.

காஜல் - மும்பை

தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து என்னுடைய குழந்தை பிறந்த தருணத்தில்  முகநூல் மூலம் தெரிந்து கொண்டேன். பிறகு தாய்ப்பாலை வழங்குவது அரசு அறிவுரையின்படி இரண்டு ஆண்டுகளோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து என்னுடைய குழந்தைக்கு 4.5 வயது வரை கொடுத்து வந்தேன். தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மை என நான்  உணர்ந்தது என் குழந்தைக்கு தற்போது ஆறு வயது ஆகிறது இதுவரை ஒரு போதும் அவளுக்கு எவ்வித மருந்துகளும் தேவைப்படவில்லை. அவளுடைய உடல் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் உதவியது. முகநூல் பக்கங்களில்  இந்தியத் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்த கட்டுரைகள் மூலம் தெரிந்துகொண்டு இரட்டை டீசட் முறையை அறிந்து கொண்டு பொது இடங்களிலும் குழந்தைக்கு பாலூட்டினேன்.

இதனால் எனக்கும் என்னை சுற்றி இருந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்தது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் குழந்தைக்குமான அன்பு அதிகமாகும் குழந்தைகளும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள். பணிக்கு சென்ற போதும்  குழந்தைக்கு பாலூட்டுவது நிறுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை இடையூறுகள் வந்தாலும், குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது தாய்மார்களின் மனநிலையில் தான் உள்ளது என்கிறார் காஜல்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn