ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து - துளிர்விடும் நம்பிக்கை

ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்து - துளிர்விடும் நம்பிக்கை

தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.

பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்னநிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே மாதம் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ந் தேதி வரை தோணி கடலில் கடினமான கால நிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது இல்லை. செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 30-ந் தேதி வரை சுமூகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் கடலில் கொந்தளிப்பு அதிகமாக காணப்பட்டதால் தோணி போக்குவரத்து ஒரு மாதம் தாமதமாக தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தோணி போக்குவரத்து தொடங்கி இருக்கிறது.

இது குறித்து கோஸ்டல் தோணி உரிமையாளர் சங்க செயலாளர் லசிங்டன் கூறும் போது.... தூத்துக்குடியில் 25 தோணிகள் உள்ளன. இதில் 5 தோணிகள் இலங்கைக்கும், 5 தோணிகள் லட்சத்தீவு, மினிக்காய் தீவுகளுக்கும், 15 தோணிகள் மாலத்தீவுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தோணி போக்குவரத்து கடல் பருவகால நிலையை பொருத்து சில மாதங்கள் இயக்கப்படுவது இல்லை. வழக்கமாக செப்டம்பர் மாதம் தொடங்கக்கூடிய தோணி போக்குவரத்து, ஒரு மாதம் தாமதமாக அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இன்று(அதாவது நேற்று) முதல் தோணிகளில் சரக்குகள் ஏற்றும் பணி தொடங்கி உள்ளது. 

வியாழக்கிழமை தோணி இலங்கை மற்றும் மாலத்தீவுக்கு புறப்பட்டு செல்லும். மேலும் மாலத்தீவில் புதிய அரசு அமைந்த பிறகு தோணி போக்குவரத்தில் சிறிய தேக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாலி துறைமுகம் அதிகாரிகள் தூத்துக்குடி வந்து தோணி உரிமையாளர்களை சந்தித்து பேசினர். தோணிக்கு சில சலுகைகள் அளிப்பதாக உறுதி அளித்து உள்ளனர். அதன்படி தோணியை துறைமுகத்தில் நிறுத்தும் போது, இழுவை படகு மூலம் இழுத்து சென்று நிறுத்துவார்கள்.

இதற்கு ஒரு முறை நிறுத்துவதற்கு ரூ.40 ஆயிரம் செலவாகும். அதனை ரத்து செய்து இருக்கிறார்கள். அதே போன்று தோணிக்கு தனியாக தளம் கேட்டு உள்ளோம். அதனையும் விரைவில் தருவார்கள் என்று நம்புகிறோம். இதே போன்று இலங்கைக்கும் சுமூகமான காலநிலை நிலவும் காலங்களில் மட்டுமே தோணி இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, ஆண்டு முழுவதும் இலங்கைக்கு தோணி போக்குவரத்துக்கு கடல் வானிப துறை வாய்மொழி அனுமதி வழங்கி உள்ளது.

விரைவில் இதற்கான உத்தரவு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் தோணி தொழில் ஆண்டு முழுவதும் நடைபெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision