சிஐடியூவிற்க்கும் வணிகர் சங்க அமைப்பினருக்கும் இடையே மோதல் -   சிபிஎம் கட்சியை திமுகவிலிருந்து வெளியேற்ற  போராட்டம் அறிவிப்பு

சிஐடியூவிற்க்கும் வணிகர் சங்க அமைப்பினருக்கும் இடையே மோதல் -   சிபிஎம் கட்சியை திமுகவிலிருந்து வெளியேற்ற  போராட்டம் அறிவிப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட லாரி பார்சல் புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த லாரி பார்சல் புக்கிங் அலுவலகத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக கூலி உயர்வு கேட்டு லாரி புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றும் சிஐடியு சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் லாரிகளில் சரக்கு ஏற்ற முடியாமலும், இறக்க முடியாமலும் தேங்கிக் கிடந்தன.

இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பேரமைப்பு லாரி புக்கிங் அலுவலகம் என்ற பெயரில் திருச்சி பழைய பால்பண்ணை அருகே இன்று காலை திறக்கப்பட்டது. அப்போது சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக லாரி புக்கிங் அலுவலகத்திற்குள் நுழைந்த சிஐடியு தொழிற்சங்கத்தினர் அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர். அங்கு பணியில் இருந்த ஊழியர்களை கட்டையால் தாக்கினர். இதில் ஒரு சிலருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

மேலும் திறப்பு விழாவுக்காக அலுவலக நுழைவுவாயில் அமைக்கப்பட்டிருந்த சாமியான பந்தல், வாழை மரங்களை தொழிலாளர்கள் அடித்து நொறுக்கி சாய்த்தனர். தகவலறிந்து வந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விரைந்து வந்து பிரச்சனையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுக்குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு கூறுகையில்.... சுமை தூக்கும் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவதற்கு இந்த புதிய லாரி புக்கிங் அலுவலகம் திறக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜா மற்றும் ராமர் தலைமையில் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தினர். ரவுடிகளை வைத்து கொண்டு சிஐடியு தொழிற்சங்கம் நடத்துகின்றனர். மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக ஸ்டாலின் இந்த தொழிற்சங்கத்தைச் சேர்ந்த கட்சியை கூட்டணியில் இருந்து வெளியற்ற வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையினர் மீது கொடூர தாக்குதல் நடத்திய சிஐடியு தொழிற்சங்கத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I