திருச்சி சாலைகளின் நடுவில் இரும்பில் திமுக கொடிக்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி சாலைகளின் நடுவில் இரும்பில் திமுக கொடிக்கம்பங்கள் வாகன ஓட்டிகள் அச்சம்

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு மனுக்களை வாங்கி அதன் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்க உள்ளனர். இலால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்,  சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில், கேர் (CARE) கல்லூரியிலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

இதையடுத்து திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், செயிண்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் மணியளவிலும் நடைபெற உள்ள சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொள்கிறார்கள். 

இந்நிகழ்விற்காக திருச்சி வெஸ்ட்ரி ரவுண்டானா பகுதி, மேஜர் சரவணன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் திமுக கட்சியினர் இரும்பு கம்பங்களை நட்டு வைத்துள்ளனர். சில பகுதிகளில் சாலையின் நடுவில் துளையிட்டு இரும்பு பைப்பால் ஆன கம்பத்தை நட்டு கொடியை பறக்க விட்டுள்ளனர். அரசியல் கட்சிகள் விழா நடத்தும் போது இதுபோன்று கொடிக் கம்பங்களை சாலையில் நடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இக்கொடி கம்பங்களால் விபத்து ஏற்படுவதும், கொடிக்கம்பங்கள் வாகன ஒட்டிகள் மீது விழுந்து விபத்தில் சிக்கும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வருகிறது. நீதிமன்றங்கள் உத்தரவையும் மீறி தொடர்ந்து இதுபோன்ற கொடிக்கம்பங்கள் நடபடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அனைத்துக் கட்சியினரும் இதுபோன்ற நிகழ்வில் இனி ஈடுபடக் கூடாது சாலையை துளையிட்டு கொடிக் கம்பங்களை நடுவதை தவிர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul 

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn