அரியலூரில், தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெற்ற குழந்தையை கழிவறையில் அழுத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாரா (வயது 20). லாராவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இருப்பினும் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் உள்ள வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இதையடுத்து நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும், அவரது தாயும் சென்றனர். அங்கு லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியில் நின்றுள்ளார்.
கழிவறைக்கு சென்ற லாரா அங்கேயே 3 மணி நேரம் இருந்துள்ளார். அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் கோப்பையில் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் முழுவதும் உள்ளே செல்லாமல் கால்கள் மட்டும் வெளியில் நீட்டிக்கொண்டு இருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் வேலை செய்யும் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் கழிவறைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு வித்தியாசமான சத்தம் கேட்டதால் அவர் சந்தேகம் அடைந்தார். உடனே மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசார் மற்றும் ஊழியர்களிடம் இதுபற்றி தெரிவித்தார். இதனால் அங்கு கூட்டம் திரண்டது. பின்னர் கதவை திறந்து பார்த்தபோது கழிவறை கோப்பையினுள் திணித்த நிலையில், குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
1 மணி நேர போராட்டம்இதையடுத்து உடனடியாக அரியலூர் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழிவறை கோப்பையை உடைத்து குழந்தையின் சடலத்தை வெளியில் எடுத்தனர். உடனடியாக பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே லாரா அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை பிடித்தனர். தற்போது லாரா அரியலூர் பழைய அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அரியலூர் நகர போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், குழந்தையை கொன்றதற்கான காரணம் என்ன?, அவர் கர்ப்பமடைய யார் காரணம்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்குத்தானே குழந்தையை பெற்றெடுத்து அதனை கழிவறை கோப்பையில் அழுத்தி இளம்பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision