தித்திப்பான செய்தி- திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களின் முயற்சிக்கு வெற்றி

இனாம்குளத்தூரில் ரயில்வே தண்டவாளத்திற்கு அடியில் கேபிள் மூலம் மின்விநியோகம் வழங்கிட நிதி ஒதுக்கப்பட்டது.திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் மக்களின் 7 வருட மின்வாரிய கோரிக்கை, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.துரை வைகோ அவர்களின் தொடர் முயற்சி காரணமாக நிறைவேறியுள்ளது.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூரில் ரயில்வே கோரிக்கை மனு ஆய்விற்காக 04.01.2025 அன்று, திருச்சி எம்.பி. திரு.துரை வைகோ அவர்கள் சென்றார்.அப்போது, பொதுமக்களின் ரயில்வே மேம்பாலக் கோரிக்கைக்கான இடத்தை ஆய்வு செய்துவிட்டு வரும்போது, பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அவரிடம் வழங்கினார்கள்.
அதில், இனாம்குளத்தூர் பெரிய பாசன ஏரி பெரிய சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனீட்டாளர்கள் சங்கத்தினர் தலைவர் எம்.ஆசாப் அலி தலைமையில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.அதில், அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து ரயில்வே கேட் அடுத்துள்ள ரஹமத்நகர், அண்ணாநகர், புதுக்குளம், கடப்பட்டி, ராஜாகாட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் கேபிள் மூலமாக மின் விநியோகம் இருந்து வந்தது.
2018-ஆம் ஆண்டு பெரும் சீற்றத்துடன் வீசிய கஜா புயலின் போது, கேபிள் வழியாக சென்ற மின் விநியோகம் பாதிப்புக்குள்ளானது. அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை துணை மின் நிலையத்தில் இருந்து இடைக்கால ஏற்பாடாக மின்சாரம் வழங்கப்பட்டது.அது இன்றளவும் தொடர்கிறது. ஆனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால், மருத்துவமனை, பள்ளி செயல்பாடுகள் பாதிப்படைகிறது. வணிகர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
எனவே, பழைய நடைமுறையின்படி, அம்மாபேட்டை துணை மின் நிலையத்தில் இருந்து, ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் கேபிள் வழியாக மின்விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அம்மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.இந்த மனு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேசுமாறு, மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களுக்கு எம்.பி. துரை வைகோ அவர்கள் பணித்தார்.இதனைத் தொடர்ந்து அவரும், மின்வாரிய அதிகாரிகளின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். அடிக்கடி நினைவும்படுத்தினார்.
இதனிடையே, மனுதாரர்களின் கோரிக்கை மூன்று மாதமாகியும் தீர்க்கப்படாததை அறிந்த எம்.பி.துரை வைகோ அவர்கள், மின்வாரிய அதிகாரிகளுக்கு போதிய அழுத்தம் கொடுக்க அறிவுறுத்தினார்.எம்.பி.துரை வைகோ அவர்களின் வழிகாட்டுதலில் மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களும், மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆராக்கிய ரெக்ஸ் தன்ராஜ் அவர்களும் விவசாய அமைப்பினர் தந்த மனுவை எடுத்துக் கொண்டு, 07.04.2025 அன்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள திருச்சி பெருநகர மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் திருமதி செல்வி மற்றும் தலைமையிடத்து செயற்பொறியாளர் கணேசன் அவர்களைச் சந்தித்து, இப்பிரச்சனைக்கு உடனடித்தீர்வு காணவேண்டும் என எம்.பி. அவர்கள் அனுப்பியதாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேற்பார்வைப் பொறியாளர் திருமதி செல்வி, செயற்பொறியாளர் கணேசன் மற்றும் உதவிப் பொறியாளர் (கிராமியம்) அசோக்குமார் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் 08.04.2025 அன்று காலை இனாம்குளத்தூர் வந்தனர்.ரயில்வே தண்டவாளம் வழியாகச் சென்ற பழைய கேபிள் மின் விநியோகப் பாதையை ஆய்வு செய்தனர்.அதன்பின்பு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ் தனராஜ், சி.பி.எம். ஒன்றியச் செயலாளர் பொன்.வேலுச்சாமி, விவசாய சங்க நிர்வாகிகள் எம்.ஆசாப் அலி, முகமது தாஜிதீன், அக்பர் அலி, முகமது பைசல்கான் ஆகியோரிடம் மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.ஆலோசனையின் முடிவில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் செல்வி அவர்கள், பழைய நடைமுறையின்படி கேபிள் மூலம் மின்சாரம் வழங்கிட திட்ட மதிப்பீடு செய்து, மதுரை கோட்ட ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று, விரைந்து பணியை முடித்துத் தருவதாக உறுதியளித்தார். இந்த செய்தியை அவ்விடத்தில் இருந்தவாறே திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களிடம் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
இதனிடையே, 22.04.2025 அன்று மீண்டும் எம்.பி. துரை வைகோ அவர்கள், ரயில்வே மேம்பாலப் பணிகள் மற்றும் மின்வாரியப் பணி ஆய்விற்காக இனாம்குளத்தூர் வந்தார். அப்போது, திரளான மக்கள் எம்.பி. அவர்களைச் சந்தித்து பேசினார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் மின்வாரிய கோரிக்கை தொடர்பாக எம்.பி. துரை வைகோ அவர்கள், திருச்சி மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் திருமதி செல்வி அவர்களிடம் தொலைபேசியில் பேசினார்.பழைய நடைமுறையின்படி கேபிள் மூலம் மின்சாரம் வழங்கிட திட்டமதிப்பீடு செய்து உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி இருப்பதாகவும், எப்படியும் ஒரு மாத காலத்தில் நிதி ஒதுக்கும் பணிகள் முடியும். அதன்பிறகு ரயில்வே துறையிடம் அனுமதி பெற்று பணிகள் துவங்குவோம் என்றார். அதற்கு எம்.பி. துரை வைகோ அவர்கள், எந்த இடத்தில் உங்களுக்கு தாமதம் என்றாலும் சொல்லுங்கள், உங்களுக்கு உதவியாக நான் அழுத்தம் தருகிறேன். குறிப்பாக ரயில்வே துறைக்கு மின்வாரியம் சார்பில் கடிதம் கொடுத்துவிட்டு என்னிடம் கூறுங்கள், நான் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் பேசி உடனடி அனுமதி பெற்றுத்தருகிறேன் என்றார்.இந்த விபரங்கள் அனைத்தையும் அங்கு கூடியிருந்த மக்களிடம் எம்.பி. துரை வைகோ அவர்கள் தெரிவித்தார். 7 வருட கோரிக்கைக்காக, சில மாதங்கள் பொறுத்திருங்கள். உங்கள் கோரிக்கையை அவசியம் நிறைவேற்றும் வரை நான் ஓயமாட்டேன் என உறுதியளித்துப் பேசினார் எம்.பி. துரை வைகோ.
இதனைத் தொடர்ந்து இனாம்குளத்தூர் மக்களின் கோரிக்கையை செயல்படுத்தும் விதத்தில், ரயில்வே தண்டவாளம் அடியில் கேபிள் மூலம் மின்சாரம் வழங்கிட ரூ.24,92,270/- (24 இலட்சம் 92 ஆயிரத்து 270) ஒதுக்கி திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் திருமதி கீதா அவர்கள் 03.05.2025 (நேற்று) ஆணை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் திருமதி செல்வி அவர்கள் கூறும்போது, மின்வாரியம் தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்துவிட்டோம். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு இன்று அனுமதி கோரி கடிதம் எழுதுவோம். அவர்களின் அனுமதி கிடைத்த பின்பு பணிகளை துவங்குவோம் என்றார்.இந்தக் கோரிக்கையை விரைந்து செயல்படுத்திட பலகட்ட தொடர் முயற்சி மேற்கொண்ட திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.துரை வைகோ அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் மின்வாரிய அதிகாரிகள் அனைவருக்கும் திருச்சி தெற்கு மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision