தேசிய சித்த மருத்துவ தினம் -  வாக்-ரன் போட்டி

தேசிய சித்த மருத்துவ தினம் -  வாக்-ரன் போட்டி

6வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள், சித்த மருத்துவத்தை ஊக்குவிப்போம் உடல்நலத்தை காப்போம் என்ற கருப்பொருளை கொண்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் , தேசிய சித்தமருத்துவ நிறுவனம், தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் வாக்-ரன் போட்டிகள் இன்று திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள மாணவர்கள் சாலையில் தொடங்கிய வாக்ரன் போட்டியை திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு இப்போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

இந்த வாக்-ரன் போட்டியில் 15 வயது முதல் 25 வயது வரை மற்றும் 25 வயது முதல் 50 வயது வரை மற்றும் 51 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீதிமன்றம் ரவுண்டானத்தில் தொடங்கி ஒத்தக்கடை, தலைமை தபால் நிலையம் ரவுண்டானத்தைச் சுற்றி மீண்டும் ஒத்தக்கடை கண்டோன்மென்ட் காவல் நிலையம் வழியாக வந்து மீண்டும் நீதிமன்றம் ரவுண்டானவில் நிறைவு பெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக உடல் ஆரோக்கியம் மற்றும் சித்த மருத்துவம் குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் எடுத்துரைத்தார். இறுதியாக இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn