திருச்சியில் வாய்காலில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், கொசு உற்பத்தியால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சியில் வாய்காலில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், கொசு உற்பத்தியால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் மஹால் தொடங்கி மாயா ஹோட்டல் பின்புறம் வழியாக செல்லும் வாய்க்காலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதிக அளவு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து கொசுவின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் பகுதி மக்களுக்கு அதிக அளவில் கொசு தொல்லை இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா ஒருபுறம் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் கொசுவினால் டெங்கு காய்ச்சல் பரவும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசி மகேந்திரன் கூறுகையில், இவ்வாய்க்காலில் தண்ணீர் தேங்கிக் கிடக்கின்றது. அதுமட்டுமின்றி ஆகாயத்தாமரை செடி வாய்க்காலை மறைக்கும் அளவிற்கு அதிகமாக வளர்ந்து கிடைக்கின்றது. இதனால் கொசுவின் உற்பத்தி அதிகரித்து பகுதியில் பொதுமக்களுக்கு அதிக நோய் தொற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

வாய்க்காலின் ஓரத்தில் மதில் சுவர்கள் கட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட மணல் திட்டுகள் அப்படியே வாய்க்காலின் அருகிலேயே கொட்டப்பட்டது. இதனால் மணல் திட்டுகளில் மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. வாய்க்கால் நீர் வெளியேற்றப்பட்டாலும் செடியிலேயே தங்கியிருக்கும் கொசுக்களின் எண்ணிக்கை குறைவதாக இல்லை இதனால் பல  நோய்த் தொற்று ஏற்படுவதற்கான காரணமாகின்றன. 

கொரோனா என்பதை விட டெங்கு நோய் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் அதிகரித்துள்ளது. பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம்  நேரடியாகவும், அலைபேசி வழியாகவும் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநகராட்சியின் இந்த மெத்தனப் போக்கு பொதுமக்களின் நோய்த்தொற்று ஏற்படுவதற்கு மேலும் வழிவகுக்கும்.

எனவே மாநகராட்சி நிர்வாகம்  வாய்க்கால் பகுதியை சீரமைத்து  கொசுவை ஒழிக்க வேண்டுமென்றும்,நோய்த்தொற்று ஏற்படுவதற்கான காரணங்களை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr