ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதேசி பெருவிழா இன்றுடன் நிறைவு - 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுந்த ஏகாதேசி பெருவிழா இன்றுடன் நிறைவு - 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது, பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், முக்கிய விழாவான  வைகுண்ட ஏகாதசி பெருவிழா,  திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்துப்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும். அதன்படி  டிசம்பர் 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. டிசம்பர் 04ம்தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை பகல்பத்து திருவிழா தொடங்கி நடைபெற்ற விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதேபோல கடந்த டிசம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி நேற்று வரை ராப்பத்து விழாவில் பத்து நாட்கள் திருமாமணி மண்டபம் எனப்படும் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பகல் பத்து - ராப்பத்து ஆகிய திருவிழாக்களிலும் மூலஸ்தான புறப்பாட்டின்போது பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு 8 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. முக்கிய திருநாளான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு டிசம்பர் 14 -ம்தேதி அதிகாலை 4.45மணிக்கு நடைபெற்றது. கோவிட் தொற்று காரணமாக  சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டு, 7 மணிக்குப் பிறகே சொர்க்கவாசலை கடந்து செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து நடைபெற்று வந்த இராப்பத்து உற்சவத்தில் நம்பெருமாள் கைத்தல சேவை, வேடுபறி உற்சவம் மற்றும் நம்பெருமாள் தீர்த்தவாரியும் வைபவமும் வெகுசிறப்புடன் நடைபெற்றதுடன், இராப்பத்து திருநாளின்போது  9-நாட்கள் தினசரி திறக்கப்பட்டு வந்த பரமபதவாசலும் நேற்று இரவு 8-மணியுடன் மூடப்பட்டது. 21 நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நம்மாழ்வார் மோட்சம் இன்று காலை நடந்தது. காலை நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் வைபவத்தை முன்னிட்டு நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்தார். அவரது விக்ரஹம் முழுவதும் திருத்துழாய் எனப்படும் துளசி மூலம் மறைக்கப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது.

நம்பெருமாள் தனது மாலையை நம்மாழ்வாருக்கு அணிவித்து சகல மரியாதையுடன் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்த வைபவம் நடைபெற்றது,. திருமாமணி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை குறைவான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு பக்தி பரவசத்துடன் சேவித்தனர். இதையடுத்து நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நிறைவுபெற்றது. கடந்த 03.12.2021 முதல் 23.12.2021 வரை 21 நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் 10 லட்சத்து 55 ஆயிரத்து 063 பக்தர்கள் வருகை தந்துள்ளதாக ஶ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn